Last Updated : 02 Feb, 2021 08:10 PM

 

Published : 02 Feb 2021 08:10 PM
Last Updated : 02 Feb 2021 08:10 PM

தங்கச்சிமடம் மீனவர் குடும்பத்துக்கு அரசு வழங்கிய காசோலைக்கு பணம் கேட்டு தந்தை வழக்கு: வங்கி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு

மதுரை

இலங்கைக் கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த தங்கச்சிமடம் மீனவர் குடும்பத்துக்கு அரசு வழங்கிய ரூ.10 லட்சத்துக்கான காசோலைக்குரிய பணத்தை வழங்கக்கோரிய வழக்கில் வங்கி நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் கடந்த 18ஆம் தேதி காலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் 4 மீனவர்களும் உயிரிழந்தனர்.

மீனவர் மேசியாவின் தந்தை அந்தோணி ராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் மீன்பிடி தொழில் செய்து வந்தேன். முதுமை காரணமாக இப்போது மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதனால் என் மகன் மேசையா (28) மீன்பிடி தொழிலுக்கு சென்றார்.

இந்தியா- இலங்கை இடையே கச்சத்தீவு அருகே ஜனவரி 18-ல் ஆரோக்கிய யேசு என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார் மேசையா. அப்போது அங்கு வந்த இலங்கை ரோந்துக் கப்பல் படகுடன் மோதியது. இதில் படகு கடலில் மூழ்கி மேசையா இறந்தார்.

தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தது. அதற்கான காசோலை வழங்கப்பட்டது. அந்த காசோலையுடன் ராமநாதபுரம் எஸ்பிஐ வங்கிக்கு சென்றேன். அப்போது என் வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் காசோலையில் உள்ள பெயர் ஒத்துப்போகவில்லை என்று கூறி பணம் தர மறுத்துவிட்டனர்.

எனக்கு இரு மகள்கள் உள்ளனர். மேசையா தான் குடும்பத்தை கவனித்து வந்தார். அவர் இறந்த நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். இதனால் காசோலைக்கான பணத்தை வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்கவும், என் மகள்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் மனுதாரர் நாளை (பிப். 3) வங்கிக்கு ஆவணங்களுடன் செல்ல வேண்டும். வங்கி அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து நாளை மறுநாள் (பிப். 4) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x