Published : 02 Feb 2021 07:30 PM
Last Updated : 02 Feb 2021 07:30 PM

வினையாகிப்போன போட்டோ ஷூட்; கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு: 50 அடி ஆழத்தில் மூழ்கி உடல்களை மீட்ட தீயணைப்புத் துறையினர்

போட்டோ ஷூட் சென்ற 2 மாணவர்கள் திரிசூலம் கல்லுக்குட்டையில் குளித்தபோது 50 அடி ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் உடல்களை ஸ்கூபா டைவர்ஸ் மூழ்கி மீட்டனர்.

பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் கியான் சந்த். இவரது மகன் ஆகாஷ்(22), ஆவடியைச் சேர்ந்தவர் நீலமேகம் இவரது மகன் தினேஷ் (21). இவர்கள் இருவரும் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளனர்.

இவர்களும் இவர்களது கல்லூரி நண்பர்களும் திரிசூலம் கல்குவாரி மலைப்பகுதியில் போட்டோக்கள் எடுப்பதற்காகச் சென்றனர். சுற்றிலும் பல இடங்களில் போட்டோ எடுத்த அவர்கள் அங்கிருந்த கல்குவாரி வெடியால் பள்ளமாகி அதில் தேங்கியிருந்த மழை நீர் குளத்தைக் கண்டனர்.

பிரம்மாண்டமான 50 அடி ஆழமான குளம் தனது பயங்கர ஆழத்தை மறைத்துக்கொண்டு மேலோட்டமாக ரம்மியமாகக் காட்சி அளித்தது, அதில் குளிப்பதற்கு அவர்கள் முடிவு செய்து இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது 50 அடி ஆழத்தில் சிக்கிய ஆகாஷ், தினேஷ் இருவரும் வெளியில் வரமுடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினர். இரண்டு நண்பர்களையும் காணாமல் தண்ணீர் குளத்தில் அங்கும் இங்கும் தேடிய நண்பர்கள் பயந்து போயினர்.

உடனடியாக இதுகுறித்து உதவி கேட்டு பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த பல்லாவரம் போலீஸார் தீயணைப்புத்துறையினரை உதவிக்கு அழைத்தனர். தீயணைப்புத்துறையினர் குளத்தில் மூழ்கி தேடியும் குளம் 50 அடி ஆழம் உள்ளதால் உடலை மீட்க முடியவில்லை. இரவு 11 மணி வரை தேடியும் பயனில்லை. இருட்டில் தேடுவது முடியாததால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

குளத்தில் சாதாரணமாக நீச்சல் வீரர்கள் கயிறுக்கட்டி உள்ளே மூழ்கி தேடுவது சிரமம் என்பதால் ஸ்கூபா டைவர்ஸ் உதவியை நாட போலீஸாரும், பல்லாவரம் தீயணைப்புத்துறையினரும் முடிவு செய்தனர். காலையில் இதுகுறித்து தீயணைப்புத்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உத்தரவின்பேரில் தீயணைப்புத்துறையின் புதிதாக உருவாக்கப்பட்ட மெரினா மீட்புப்பணி நிலைய குழுவிலிருந்து ஸ்கூபா டைவர்ஸ் (Scuba divers - Self-Contained Underwater Breathing Apparatus) வரவழைக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சையது முஹம்மது ஷா தலைமையில் ஸ்கூபா டைவர்ஸ் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் 50 அடி ஆழ குளத்தில் தேடும் பணியைத் தொடங்கினர். நீண்ட தேடலுக்குப்பின் குளத்தின் அடியில் புதைந்துக்கிடந்த இருவரது உடலையும் மீட்டு போலீஸார் வசம் ஒப்படைத்தனர்.

சாதாரணமாக மேலுக்கு அழகாக தோன்றும் கல்குவாரி தண்ணீர் குளம் எவ்வளவு ஆபத்து நிறைந்தது என்பதை அங்கு வரும் பொதுமக்கள் புரிந்துக்கொள்ளாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது எனத் தெரிவித்த போலீஸார் கல்குவாரிக்கு பொதுமக்கள் வருவதை தடைசெய்யலாமா என யோசித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x