Last Updated : 02 Feb, 2021 04:49 PM

 

Published : 02 Feb 2021 04:49 PM
Last Updated : 02 Feb 2021 04:49 PM

பட்டா மாறுதல் மனுக்கள் தேக்கம்: நில அளவையர் பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள நில அளவையர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் வருவாய்த்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நில அளவையர், வரைவாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 307 வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பட்டா மாறுதல், நில அளவு பரப்பு மாறுதல், பட்டா உட்பிரிவு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைக்காக அனுப்பப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. இதே கோரிக்கைகளுடன் தினமும் ஆயிரக்கணக்கானோர் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

157 நில அளவையாளர் பணியிடங்களில் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். 128 நீர்வள ஆதாரப் பகுதிகளில் வரைபட உதவியாளர், கள நில அளவை வரைவாளர், நில வருவாய் அளவையாளர் மற்றும் முதுநிலை அளவையாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

நில அளவையாளர்கள் குறைவாக இருப்பதால் உரிய நேரத்தில் இடங்களை அளவீடு செய்து பட்டா மாறுதல், நில எடுப்பு, நிலம் வழங்குதல் போன்ற பணிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இதனால் பணியாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே காலியாக உள்ள நில அளவையர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர், நில சீர்த்திருத்தத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x