Published : 02 Feb 2021 04:35 PM
Last Updated : 02 Feb 2021 04:35 PM

315 நாட்களுக்கு பின்னர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு அனுமதி

ராமநாதசுவாமி ராமநாதசுவாமி கோயில் தீர்த்தத்தில் புனித நீராடும் பக்தர்கள். | படம்: எல். பாலச்சந்தர்.

ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் 315 நாட்களுக்கு பின்னர் பக்தர்களுக்கு நீராட அனுமதி அளிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கினால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கடந்த மார்ச் 24 முதல் மூடப்பட்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் செப்டம்பர் 01 முதல் அனுமதிக்கப்பட்டடையடுத்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவதற்கு பக்தர்களுக்கு தடை நீடித்து வந்தது.

இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தீர்த்தமாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் யாத்திரை பணியாளர்கள், தீர்த்த கிணறுகளைத் திறக்க தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தீர்த்தமாடலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து 315 நாட்களுக்கு பின்னர் பக்தர்கள் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் மகாலட்சுமி தீர்த்தம், கெந்தமாதன தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், பிரமஹத்தி விமோசன தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், கங்கா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், யமுனா தீர்த்தம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், சக்கர தீர்த்தம், சர்வ தீர்த்தம், சேது மாதவர் தீர்த்தம், சிவ தீர்த்தம், நள தீர்த்தம், சாத்யாமமிர்த தீர்த்தம், நீல தீர்த்தம், சூரிய தீர்த்தம், கவய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கோடி தீர்த்தம் என 22 புண்ணிய தீர்த்தங்களில் செவ்வாய்கிழமை புனித நீராடி மகிழ்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x