Published : 02 Feb 2021 01:01 PM
Last Updated : 02 Feb 2021 01:01 PM

ஒட்டுமொத்தக் கூட்டத்தொடரையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்: வெளிநடப்புக்குப் பிறகு ஸ்டாலின் பேட்டி

ஒட்டுமொத்தக் கூட்டத்தொடரையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

2021-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், ஆளுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்ப்புத் தெரிவிப்பதாக இருந்தால் ஐந்து நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு வாருங்கள் என ஆளுநர் தெரிவித்ததை அடுத்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''மத்திய அரசு தமிழ்நாட்டுக்குக் கொடுத்திருக்கும் லாலிபாப் இந்த பட்ஜெட். 2015-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2019-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி, மதுரைக்கே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டு விழா நாடகத்தை நடத்திவிட்டுச் சென்றார். ஆனால் இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் விலைவாசியும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கோ, தமிழக மக்களுக்கோ அல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசு பட்ஜெட் போட்டுள்ளது. ஆளுநர் இன்று ஒரேயொரு உண்மையை மட்டும் பேசினார். இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது என்று தெரிவித்தார். அதை மட்டும் வரவேற்கிறேன்.

ஆளுநர் உரையைப் புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளது. ஏனெனில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி அதிமுக அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல்கள் குறித்து, ஆதாரங்களைத் திரட்டி ஆளுநரிடம் புகார் கொடுத்தோம். ஆனால், அதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலுக்குத் துணை நிற்கும் வகையில் ஆளுநர் இருக்கிறார். எழுவர் விடுதலை தொடர்பாகவும் அவர் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இவை அனைத்தையும் கண்டித்து ஒட்டுமொத்தக் கூட்டத்தொடரையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கொள்ளையடித்துள்ள பணத்தைக் கொண்டு ஓராண்டுக்கான பட்ஜெட்டைப் போட்டுவிடலாம். இவற்றை எல்லாம் சட்டப்பேரவையில் பேசுவதற்குப் பதிலாக மக்கள் மன்றத்தில் பேச முடிவு எடுத்துவிட்டோம்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x