Published : 02 Feb 2021 11:36 AM
Last Updated : 02 Feb 2021 11:36 AM

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டம்: ஆளுநருடன் எதிர்க்கட்சிகள் வாக்குவாதம்; வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், ஆளுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் ஐந்து நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு வாருங்கள் என ஆளுநர் தெரிவித்ததை அடுத்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கரோனா பரவலை அடுத்து கடந்த முறையைப் போலவே சட்டப்பேரவைக் கூட்டத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கலைவாணர் அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. முதல் நாள் கூட்டம் என்பதால் காலை 11 மணிக்குத் தொடங்கியது.

ஆளுநர் சபைக்கு வந்தவுடன் உறுப்பினர்கள் எழுந்து நின்று வரவேற்றனர். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் ஆளுநர், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். உறுப்பினர்கள் வணக்கம் தெரிவித்தவுடன் ஆளுநர் உரையை வாசிப்பதற்காக எழுந்து நின்றார். ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேச எழுந்தார். அப்போது ஆளுநர் அவரை அமரும்படி சைகை செய்தார்.

மத்திய அரசு தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. அதற்கு தாம் மகிழ்ச்சி அடைவதாக ஆளுநர் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆளுநருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் சொன்னதில் தவறேதும் இல்லை, அமருங்கள் என ஆளுநர் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட்டால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கூறினார்கள். அப்போது ஆளுநர், உட்காருங்கள். இது கடைசி பட்ஜெட் என்று கூறினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதம் செய்ததால், உங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டுமானால் 5 நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு உள்ளே வாருங்கள் என்று கூறிவிட்டு, தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். இதையடுத்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x