Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 1.05 லட்சம் ஹெக்டேரில் மானாவாரி பயிர்கள் சேதம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 11 மாதங்களுக்கு பிறகு, வழக்கமான முறையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமைவகித்தார். ஏராளமான மக்கள், ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்தனர். முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

செய்தியாளர்களிடம், ஆட்சியர் கூறியதாவது: மாவட்டத்தில் 1.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. அதிகபட்சமாக 60 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. 40 ஆயிரம் ஹெக்டேரில் மக்காசோளமும், 20 ஆயிரம் ஹெக்டேரில் பாசிப்பயறும் பயிரிடப்பட்டுள்ளது. இதுதவிர, வெங்காயம், மிளகாய், பருத்தி போன்ற தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன. சேதம்குறித்த கணக்கெடுப்பு பணி கிட்டத்தட்ட முடிவு பெற்றுள்ளது. சுமார் 90 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு மானாவாரி பயிர்களும், 15 ஆயிரம் ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விவசாயிகள் குறித்த முழுமையான விவரம் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தாமிரபரணி கரையோர பகுதிகளில் நெல், வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளன. அந்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குத்தகை விவசாயிகளுக்கும் முழுமையாக நிவாரணம் கிடைக்கும்.

கரோனா பாதிப்பு குறைவு

மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் வழக்கம்போல் நடைபெறுகின்றன. தினமும் 800 முதல்900 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால், கரோனா பாதிப்புவிகிதம் 0.1 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்கள சுகாதார பணியாளர்களுக்கு 15 மையங்களில், தினமும் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அடுத்ததாக வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய வடிகால்களில் உள்ள அடைப்புகள், இடையூறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.

முன்னதாக கொடிநாள் வசூலில் 100 சதவீதத்துக்கு மேல் சாதனை படைத்த 18 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் செந்தில் ராஜ் வழங்கினார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தமிழரசி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x