Published : 01 Feb 2021 08:18 PM
Last Updated : 01 Feb 2021 08:18 PM

மதுரையில் பழைய வீட்டை இடித்துப் புதுப்பிக்கும் பணியின்போது இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி

மதுரை 

மதுரையில் பழைய வீட்டை இடித்து புதுப்பிக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது சுவர், மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

மதுரை மேலவடம்போக்கி தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவருக்குச் சொந்தமான 600 சதுர அடி பரப்பளவுள்ள மூன்று மாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதுப்பிக்கும் பணிகள் சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கட்டுமானப்பணியில் தொழிலாளர்களான ஆவியூரைச் சேர்ந்த சந்திரன் (60), முனியசாமி, பாறைப்பட்டியைச் சேர்ந்த ராமன் (55), தத்தனேரியைச் சேர்ந்த ஜெயராமன் (55) மற்றும் அழகர், மாணிக்கவாசகம் ஆகியோர் ஈடுபட்டனர்.

மதியம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென வீட்டின் வலது பக்க சுவர் இடிந்துவிழுந்ததில் மேற்கூரையும் பெயர்ந்து விழுந்ததால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

உடனடியாக திடீர் நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

அதில், சந்திரன் (60), ராமன் (55), ஜெயராமன் (55) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதில் முனியசாமி காயமடைந்தார். அழகர், மாணிக்கவாசகம் ஆகிய இருவர் காயமின்றி தப்பினர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து திடீர் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் போலீஸ் தரப்பில் கூறுகையில், மாநகராட்சியின் அனுமதிபெற்று பழைய வீட்டை புதுப்பிக்கும் வேலைகள் நடப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x