Published : 01 Feb 2021 01:43 PM
Last Updated : 01 Feb 2021 01:43 PM

தூத்துக்குடியில் எஸ்.ஐ. மீது சரக்கு வாகனம் மோதிக் கொலை: மதுபோதை நபரின் கொடூரச் செயல்

மதுபோதையில் தகராறு செய்த இளைஞரைக் கண்டித்து எஸ்.ஐ. அனுப்பி வைத்தார். இதனால் கோபம் கொண்ட மதுபோதை இளைஞர், இருசக்கர வாகனத்தில் சென்ற எஸ்.ஐ. மீது சரக்கு வாகனத்தை மோதிக் கொலை செய்தார். தப்பித்து ஓடிய அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (56). இவர் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு போலீஸாருடன் ரோந்துப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குள்ள பரோட்டா கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்வதாகத் தகவல் வந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் பாலு, மதுபோதையில் இருந்த கொற்கைவிளக்கைச் சேர்ந்த முருகவேல் என்கிற இளைஞரைக் கண்டித்து அனுப்பியுள்ளார்.

அங்கிருந்து அந்த இளைஞரும் புறப்பட்டுச் சென்றுவிட்டார். பின்னர் கொற்கைவிளக்கு சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் எஸ்.ஐ. பாலு ரோந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த சரக்கு வேன் அருகில் முருகவேல் நின்று கொண்டிருந்தார்.

அந்த நபரைப் பார்த்து உதவி ஆய்வாளர் பாலு, நீ இன்னும் வீட்டுக்குப் போகவில்லையா? என்று கேட்டுள்ளார். அதற்குப் போய் விடுகிறேன் அய்யா என்று அந்த இளைஞர் கூறியுள்ளார். சீக்கிரம் கிளம்பிப் போ, வீணாக யாரிடமும் தகராறு செய்து கொண்டிருக்காதே என எச்சரித்துவிட்டு, பாலு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த மதுபோதை இளைஞர் சரக்கு வாகனத்தை வேகமாகச் செலுத்தி சாலையில் சென்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் பாலுவின் பைக் மீது வேகமாக மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் முருகவேல் வேகமாக வாகனத்தைச் செலுத்தி தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி துரை கண்ணன், ஏரல் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பாக ஏரல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உதவி ஆய்வாளர் பாலுவைச் சரக்கு வாகனத்தால் மோதிக் கொலை செய்த முருகவேலைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்துத் தேடினர். இந்நிலையில் முருகவேல் விளாத்திக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சாதாரண ரோந்து விவகாரத்தில் மதுபோதை இளைஞரைக் கண்டித்து அனுப்பியதற்காக உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் சுப்பிரமணி என்கிற காவலர் குண்டுவெடித்து உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x