Published : 22 Jun 2014 12:42 PM
Last Updated : 22 Jun 2014 12:42 PM

பாலாற்றில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்: சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தான் வெற்றி பெற்ற குப்பம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசும்போது, ‘பாலாற்றின் குறுக்கே அணைகளைக் கட்டுவேன். பாலாற்றில் அணை கட்டி விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்ப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது பாலாறு. இதன் குறுக்கே அணை கட்டினால், தமிழக மக்கள் குடிநீருக்கு தவிக்க நேரிடும். சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்க தெலுங்கு - கங்கை திட்டத்தை முன்னெடுத்துச் சென்று திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றித் தந்தவர் சந்திரபாபு.

அப்படிப்பட்ட மனித நேயமும், அண்டை மாநில மக்களின்பால் அன்பும் கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு, பாலாற்றில் அணை கட்டுவேன் என்று கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை. புதிய சீமாந்திரா முன்னேற்றத்துக்கான கனவுத் திட்டங்களின் செயலாக்கத்தில் சந்திரபாபு நாயுடு, தனது நேரத்தையும் நினைப்பையும் செலவிட வேண்டுமே தவிர, ஒருதரப்பு மக்களுக்கு பால் வார்ப்பதாகச் சொல்லி, மற்றொரு தரப்பு மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாழ்படுத்துவது, அவருடைய நிர்வாகத் திறனுக்கு நிச்சயமாக பெருமை சேர்க்காது.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x