Last Updated : 31 Jan, 2021 05:51 PM

 

Published : 31 Jan 2021 05:51 PM
Last Updated : 31 Jan 2021 05:51 PM

மக்களுக்கு நாராயணசாமி துரோகம்; புதுச்சேரியில் 23-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று பாஜக ஆட்சியமைக்கும்: ஜே.பி. நட்டா பேச்சு

ஜே.பி. நட்டா - படங்கள்: எம். சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரி மக்களுக்கு நாராயணசாமி துரோகமிழைத்துவிட்டார், புதுச்சேரியில் பாஜக 23க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் என்று பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

பாஜக ஆட்சி அமைந்தவுடன், கிடப்பில் உள்ள அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடங்கப்படும் என உறுதி தந்தார்.

தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பாஜக தேசிய தலைவர் நட்டா வந்தார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார், அங்கிருந்து விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள விமான தளத்திற்கு இன்று வந்தார்.

அங்கு அவரை பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்ததான் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நட்டா ஆளுநர் மாளிகை அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு வந்தார். அங்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின்னர் அங்கிருந்து மீண்டும் கார் மூலம் புறப்பட்டு ஏஎப்டி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் நமச்சிவாயம் ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் கடந்த 28- ம் தேதி தைப்பூச நாளில் பாஜகவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.

தற்போது புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் நட்டா முன்பாக நமச்சிவாயம் ஆதரவாளர்கள் பங்கேற்று பாஜகவில் இணைந்தனர். இதற்காக அவர்கள் பேருந்து, வேன், கார் ஆகியவற்றின் திரண்டனர். மேலும் மயிலாட்டம் ஒயிலாட்டம், கெண்டைமேளம், கொட்டு, தப்பாட்டம், ஆகியவற்றுடன் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் ஆதரவாளர்கள் பேனர்களை பிடித்தவாறு பொதுக்கூட்டத்துக்கு வந்தனர்.

அதேபோல் ஊசுடு தொகுதியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆதரவாளர்களும் கார் மற்றும் வேன்களில் வந்து கட்சியில் இணைந்தனர்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அருகில் பாஜக பொறுப்பாளர்கள் சி.டி ரவி,நிர்மல்குமார் சுரானா,புதுச்சேரி செயலாளர் சுவாமிநாதன் எம்எல்ஏ,செல்வகணபதி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் முன்னாள் எம்எல்ஏ.தீப்பாய்ந்தான்

இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது

ஆன்மீக பூமியான புதுவைக்கு வந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் மத்திய பாஜக ஆட்சியில நிறைவேற்றப் பட்டுள்ளது. புதுவையில் மத்திய அரசால் 6 லட்சம் எல்இடி பல்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது, 13 ஆயிரத்து 500 பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, 32 ஆயிரம் ஏழை பெண்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முமுவதும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது, புதுவையில் பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் பயனடைகின்றனர், ஜிப்மருக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 100 கோடி மத்திய அரசு நிதி வழங்குகிறது ஜிப்மர் கிளை காரைக்காலில் அமைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி 130 கோடி மக்களுக்கும் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு வழங்கி வருகிறார். கரோனாவில ஒரே நாளில் 10 லட்சம் சோதனைகளை நாம் செய்துள்ளோம். ஆண்டுக்கு 3 லட்சம் வெண்டிலேட்டர்களையும் கோவிட் கிட்டுகளையும் தயாரிக்கிறோம். தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்து உலக அளவில் இந்தியா முன்னேற்ற பாதையில் உள்ளது.ரேஷன் கடைகளை புதுவையில் மூடிவிட்டதாக கூறினார்கள்.

இதனை கேட்க எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. மத்திய அரசு புதுவைக்கு 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கியுள்ளது. இதுதான் புதுவை ஏழைகளுக்கு கிடைத்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது இணையமைச்சராக இருந்த நாராயணசாமி ஜார்கண்ட் மாநிலத்திற்கு 5 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். அப்போது புதுவையின் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை.

கூட்டத்தில் ஒரு பகுதி

மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். புதுவையின் நிலை விரைவில் மாறும். புதுவையில் பாஜக 23 இடங்களை கைப்பற்றும். பாஜக ஆட்சி அமைந்தவுடன், கிடப்பில் உள்ள அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடங்கப்பபடும், உள்ளாட்சி தேர்தல நடத்தப்படும், புதிய ரெயில் பாதை அமைக்கப்படும். புதுவை காரைக்காலில் மேம்பாலம் அமைக்கப்படும் மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருவோம்.

சம்பளம் இன்றி தவிக்கும அரசு ஊழியர்களுக்கு நிலுவை தொகையுடன் முழுமையான சம்பளத்தை வழங்குவோம், ஆட்சி மாற்றம் வந்த பிறகு ஊழல் இல்லாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதனை புதுவை மக்கள் உணர்வார்கள், உங்கள் உற்சாகத்தை பார்க்கும் போது பாஜகவிற்கு 23 க்கும் மேற்பட்ட இடங்களை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x