Published : 31 Jan 2021 12:01 PM
Last Updated : 31 Jan 2021 12:01 PM

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்; 43 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

போலியோ ஞாயிறு என்று அழைக்கப்படும் தேசிய போலியோ சொட்டு மருந்து தினம் ஜனவரி 31-ம் தேதியான இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து போலியோவை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இதனை தொடங்கி வைத்தார்.
அவரும், அவரது மனைவி சவிதா கோவிந்தும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினர்.

இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு உலகளவில் ஏற்பட்ட போலியோ பாதிப்பில், 60 சதவீதம் பாதிப்பு இந்தியாவில் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி நாட்டின் கடைசி பாதிப்பு ஹவுராவில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, கடந்த பத்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது

தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும், போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x