Published : 31 Jan 2021 12:06 PM
Last Updated : 31 Jan 2021 12:06 PM

ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம் வாபஸ்; 17 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்: எல்லை தாண்டி செல்லக்கூடாது என சங்கக் கூட்டத்தில் முடிவு

இலங்கை கடற்படையினரால் சிறைபி டிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமே சுவரம் மீனவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக்கோரி கடந்த 13-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ராமேசுவரத்தைச் சேர்ந்த 29 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஜன.19-ம் தேதி தாயகம் திரும்பினர். ஆனால், 9 பேர் விடுவிக்கப்படவில்லை.

இதனிடையே, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பி டிக்கச் சென்ற மெசியா, சாம்சன் டார்வின், நாகராஜ், செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலால் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து, இச்சம்பவத்துக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் உள்ள 9 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி, வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமேசுவரம் மீன்பிடித் துறை முகம் அருகில் மீனவப் பிரதிநிதி மகத்துவம் தலைமையில் மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், இலங்கை சிறையில் உள்ள 9 ராமேசுவரம் மீனவர்களையும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலைநி றுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று சனிக்கிழமையிலிருந்து மீன் பிடிக்கச்செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. எல்லைத் தாண்டி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது.

இதை மீறும் மீனவர்கள் மீது மீன்வளத் துறை மற்றும் மீனவச் சங்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி நேற்று ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென் றனர்.ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து விசைப்படகுகளுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகளை நாட்டுப் படகில் ஏற்றிச் செல்லும் மீனவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x