Published : 15 Nov 2015 10:14 AM
Last Updated : 15 Nov 2015 10:14 AM
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதால் மழை நீர் வீணாகி தேவையற்ற இடங்களில் தேங்கி வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் உபரிநீரை ஆந்திரத்துக்கே அளிக்கலாம் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த மழை நீர் முழு மையாக சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சோழவரம் உள்ளிட்ட ஏரிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பட்டுள்ளதால் மழை நீர் வீணாகி வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள் ளூர் மாவட்டத் தலைவர் பி.துளசி நாராயணன் கூறும்போது, ‘சென்னைக்கு குடிநீர் தரும் சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீரை கொண்டு வரும் நீர்பிடிப்பு பகுதி களான ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட வைகளில் 90 சதவீதம், நீர்த் தேக்கங்களின் மேற்கு பகுதி யில்தான் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், அவைகளுக்கு செல்லும் வரத்துக்கால்வாய்கள் மட்டுமல்லாமல், சோழவரம் ஏரியின் நீர்வரத்துக் கால்வாய்கள் கணிசமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இதனால், மழைநீர் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், வயல்வெளிகளில் தேங்கி குடிநீர் ஏரிக்குச் செல்லாமல் வீணாகி வருகிறது. இதனால் ஊத்துக்கோட்டை, பொன்னேரி, பள்ளிப்பட்டு வட்டங்களில் உள்ள ஏரிகள் எதுவும் நிரம்பவில்லை. சோழவரம் உள்ளிட்ட ஏரிகளுக்கும் மழை நீர் சென்று சேரவில்லை.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும். இதன்மூலம் குடிநீர் தரும் ஏரிகளுக்கு நீர் தங்குதடையின்றி செல்லும். கிருஷ்ணா நீரையோ, வீராணம் நீரையோ நம்பியிருக்கும் நிலை மாறும்.
சென்னையின் குடிநீர் தேவைக்குப் போக மீதமுள்ள நீரை ஆந்திராவுக்கு தரும் அளவுக்கு நீர் வளம் பெருகும். திருவள்ளூர் மாவட்டமும் விவசாயத்தில் செழுமையடையும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT