Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகக் காட்சி பிப்.24-ல் தொடக்கம்: பபாசி அறிவிப்பு

44-வது புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.24 முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டு கரோனா தொற்றால் ஜனவரியில் நடைபெறவிருந்த 44-வது புத்தகக்காட்சி தள்ளிவைக்கப்பட்டது.

14 நாட்கள்

இந்நிலையில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி புத்தகக் காட்சியை நடத்திக்கொள்ள தமிழக அரசு கடந்த 22-ம் தேதி அனுமதி வழங்கியது. அதன்படி 44-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப். 24முதல் மார்ச் 9-ம் தேதி வரை 14 நாட்கள் நடத்தப்படும். காலை 11 முதல் மாலை 8 மணிவரை வாசகர்கள் அனுமதிக்கப்படுவர். அரசு அறிவுறுத்திய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் புத்தகக் காட்சி அரங்கில் மேற்கொள்ளப்படும் என்று பபாசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புத்தகக்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு நடைபெற்ற புத்தகக் காட்சியை 10 லட்சம் வாசகர்கள் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x