Published : 30 Jan 2021 04:32 PM
Last Updated : 30 Jan 2021 04:32 PM

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், 2009-ம் ஆண்டு அரசாணை நிலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ''தமிழகத்தில் முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசுப் பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாகவும், அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை 354-ஐ அமல்படுத்தாதது அரசு மருத்துவர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அரசாணையை வெளியிட்ட அரசே அதை அமல்படுத்தாததால், கடந்த 11 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கௌதமன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் பாப்பையா வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.

இதையடுத்து 2009-ம் ஆண்டு அரசாணை அமல்படுத்தப்படுமா, அமல்படுத்தப்படாதா? என பிப்ரவரி 3-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x