Published : 30 Jan 2021 01:35 PM
Last Updated : 30 Jan 2021 01:35 PM

புதுச்சேரியில் 39 ஆயிரத்தைக் கடந்த கரோனா

புதுச்சேரியில் கரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்த நிலையில், இன்று புதிதாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று ஜன 30) கூறியதாவது:

''புதுச்சேரி மாநிலத்தில் 2,686 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 25 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், மாஹேவில் 12 பேருக்கும் என மொத்தம் 43 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 647 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 39 ஆயிரத்து 47 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் மருத்துவமனைகளில் 116 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 190 பேரும் என மொத்தம் 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 94 (97.56 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 73 ஆயிரத்து 656 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 84 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x