Last Updated : 29 Jan, 2021 06:49 PM

 

Published : 29 Jan 2021 06:49 PM
Last Updated : 29 Jan 2021 06:49 PM

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு மார்ச் வரை கரோனா வரி நீட்டிப்பு: தமிழகத்துக்கு இணையாகவே விலை

புதுச்சேரி

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு மார்ச் 31 வரை கரோனா வரி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்துக்கு இணையாகவே விலை இருக்கும்.

புதுவையில் கரோனோ தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் தொடக்கத்தில் மதுபானக் கடைகள், மதுபார்கள் மூடப்பட்டன. 2 மாதங்களுக்குப் பிறகு மே 24-ம் தேதி மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க அரசு அனுமதித்தது.

அப்போது, மதுபானங்களுக்கு கரோனா வரி விதிக்கப்பட்டது. இவ்வரிக் காலம், முதலில் ஆகஸ்ட் மாதம் வரை இருந்தது. அதையடுத்து நவம்பர் 30 வரை சிறப்பு கலால் வரி என நீட்டிக்கப்பட்டது. இதனால் கரோனா பரவலைத் தடுக்கலாம் என்ற அடிப்படையில் கரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதாக கிரண்பேடி தெரிவித்திருந்தார்.

அதையடுத்து நவம்பர் 29-ம் தேதி கரோனா வரியை நீக்க அரசுத் தரப்பில் கோப்பு அனுப்பி, கிரண்பேடி ஏற்கவில்லை. ஜனவரி 31-ம் தேதி வரை இவ்வரியை நீட்டித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இரு மாதங்களுக்கு மதுபானங்களுக்கு கரோனா வரி நீட்டிக்கப்பட்டு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளதாக கலால்துறை தெரிவித்துள்ளது.

கரோனா வரியால் புதுவையில் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை உயர்ந்திருந்தது. குறைவான விலை அதிகரித்ததால் மதுபான விற்பனையும் சரிந்தது. இதனால், அரசுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காமல் வரி வருவாய் குறைந்துள்ளது. இதனால் கரோனா வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டும் அதை ஆளுநர் ஏற்காமல் மீண்டும் இதை நீட்டித்துள்ளார்.

கலால்துறை சார்பில் சிறப்புக் கலால் வரியை மேலும் இரு மாதங்களுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீட்டித்த இவ்வுத்தரவால் வரும் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என கலால்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x