Published : 29 Jan 2021 05:27 PM
Last Updated : 29 Jan 2021 05:27 PM

ஜன.31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது?- தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை

ஜன.31 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

· போலியோ சொட்டு மருந்து முகாம் ஜன.31 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும்.

· தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும்.

· இம்மையங்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

· யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

முக்கிய அம்சங்கள்

* சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

* 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் 31.01.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

* போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெறத் தகுந்த கோவிட்-19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.

* சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகம்கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் கட்டாயமாகும்.

* தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது / சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

* பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல்/ இருமல் அல்லது மற்ற தொற்று கோவிட் தொடர்பாக இருந்தால் மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது.

* மையங்களில் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

* தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

* அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

* விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

* முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

* போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

* போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் கோவிட்-19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலைப் பின்பற்றி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

* போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும்.

எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோத்துச் செயல்படுவோம்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x