Published : 29 Jan 2021 01:15 PM
Last Updated : 29 Jan 2021 01:15 PM

குடியரசுத் தலைவர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது சரியல்ல: ஜி.கே.வாசன்

சென்னை

நாடாளுமன்றத்தில் நடைபெறும் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏற்புடையதல்ல. பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு மக்கள் பணிகளுக்காக நியாயமாகக் குரல் கொடுத்து மக்கள் நலன் காக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“2021-22ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில், நாடு கரோனா பாதிப்பில் இருந்தும் முழுமையாக விடுபட்டு மக்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சவாலாக இருந்ததும், நாட்டின் பொருளாதாரம் சற்று பின்தங்கியதும், மக்களின் வளர்ச்சியும், நாட்டின் முன்னேற்றமும் பாதிக்கப்பட்டதும் தவிர்க்க முடியாதது. இருப்பினும் மத்திய அரசு கரோனா தடுப்புக்காக மக்களுக்குக் கொடுத்த கோட்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பரிசோதனை மையங்கள், தடுப்பூசி போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் நாட்டில் இப்போது கரோனா பற்றிய அச்சம் குறைந்து இயல்பு நிலை படிப்படியாகத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்த முக்கிய நாளில் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கடமையாகும். ஆனால், பல எதிர்க்கட்சிகள் இக்கூட்டத்தின் முதல் நாளிலேயே குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கும் வகையில் பங்கேற்காமல் இருப்பது நாட்டு மக்களின் நலனுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் உகந்ததாக அமையாது.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களின் நலன் கருதி தங்களின் கோரிக்கைகளை, வாதங்களை முறையாக நாடாளுமன்றத்தில் முன்வைத்து, நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும். காரணம் நாடே கரோனா வைரஸ் பரவலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது நாட்டு மக்களுக்கும், நாட்டின் பொருளாதார உயர்வுக்கும்-பட்ஜெட்தான் அடிப்படையானது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறத் தொடங்கியுள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவோ, நியாயமான விவாதத்தை முன்வைக்கவோ கூட்டத்தொடரில் கலந்துகொண்டு நாடாளுமன்ற நெறிமுறைகளை கடைப்பிடித்து மக்கள் நலன் காக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x