Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சசிகலாவுக்கு வாழ்த்து

சசிகலா விரைவில் குணமடைந்து அறப்பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, தண்டனை காலம் முடிந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் சுவாசப் பிரச்சினை உள்ளதால் தற்போது அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் சசிகலாவுக்கு வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வாழ்த்துச் செய்தியில், சசிகலா பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம்சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே, இது அரசியல்சார்ந்த பதிவு அல்ல. என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் முதல்வர் பழனிசாமியை நேற்று சந்தித்து பேசிய நிலையில், 2-வது மகன் வி.ப.ஜெயபிரதீப் வெளியிட்ட இந்த பதிவு அதிமுக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சியின் தலைமையே சசிகலா குறித்து பேச வேண்டாம் என உத்தரவிட்டுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மகனே இது போன்ற பதிவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x