Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
சீர்காழியில் நகைக் கடை அதிபர் வீட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிக்கியவர்களுக்கு, சேலம் நகைக் கடை அதிபர் வீட்டில் 275 பவுன் நகை கொள்ளைபோன வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பான விசாரணைக்காக சேலம் தனிப்படை போலீஸார் சீர்காழி சென்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தன்ராஜ் என்ற நகைக்கடை அதிபரின் வீட்டுக்குள் நேற்று முன்தினம் வட மாநில கொள்ளையர்கள் சிலர் புகுந்து, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததுடன், வீட்டில் இருந்த நகைக்கடை அதிபரின் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை கொலை செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வட மாநில கொள்ளையர்களில் மணிபால் சிங் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், ரமேஷ், மணிஸ் மற்றும் கருணாராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சீர்காழி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் குரங்குச்சாவடியில் நகைக்கடை அதிபர் வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு 275 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சீர்காழி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என சேலம் மாநகர போலீஸார் சந்தேக்கின்றனர். எனவே, சேலம் சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் சீர்காழி சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “சீர்காழியில் நடந்த கொள்ளை சம்பவத்தின் சில நிகழ்வுகள், சேலத்தில் நடந்த கொள்ளை சம்பவத்துடன் ஒத்துப் போகின்றன. அதனால், இங்கு சேகரிக்கப்பட்டுள்ள தடயங்களைக் கொண்டு, சீர்காழி கொள்ளையில் சேகரிப்பட்டுள்ள தடயங்களை ஒப்பிட்டுப் பார்த்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!