Last Updated : 28 Jan, 2021 09:43 PM

 

Published : 28 Jan 2021 09:43 PM
Last Updated : 28 Jan 2021 09:43 PM

தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு

வாணியம்பாடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சரத்குமார் பேசினார். அருகில் ராதிகா சரத்குமார்.

வாணியம்பாடி

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் வேலூர் மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டலச் செயலாளர் ஞானதாஸ் தலைமை வகித்தார். சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கட்சி நிர்வாகிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணி அமைப்பது குறித்த ஆலோசனைகளை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:

''புதுடெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டம் குறித்தும், எதிர்காலத்தில் வேளாண் திட்டங்களில் உள்ள பயன்கள் குறித்தும் அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சித் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்க தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். இக்குழுவினர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துகளைக் கேட்பார்கள். தேர்தலையொட்டி தமிழகத்தில் 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன் பிறகு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

சமத்துவ மக்கள் கட்சி தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் உள்ளது. அதிமுக கூட்டணியில் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடு முடிவு செய்வோம். அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருந்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

தமிழகத்தில் அதிமுக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் முதன்மை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி''.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x