Published : 26 Jun 2014 08:23 AM
Last Updated : 26 Jun 2014 08:23 AM

சிவகாசி அருகே பரிதாபம் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் இறந்தனர்.

சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் மல்லி அருகேயுள்ள வேண்டுராயபுரத்தில் சிவகாசியைச் சேர்ந்த வைரமுத்துக்குமார் என்பவருக்குச் சொந்தமான முன்னா என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

புதன்கிழமை மாலை இந்த பட்டாசு ஆலையில் ஏராளமானோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் ராக்கெட் வெடிகளுக்கு மருந்து நிரப்பும்போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால், அந்த அறையும் அடுத்தடுத்து உள்ள 8 அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பற்றி 8 கட்டடங்களும் இடிந்து சேதமடைந்தன.

விபத்து ஏற்பட்ட அறையில் பட்டாசுகளுக்கு வெடிமருந்து நிரப்பிக் கொண்டிருந்த திருத்தங்கல் பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் (55), முனியசாமி (35) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி இறந்தனர். கூமாபட்டியைச் சேர்ந்த கோவிந்தபாபு (19) என்பவர் படுகாயமடைந்தார்.

வெடிவிபத்து ஏற்பட்டவுடன் பட்டாசுத் தொழிற்சாலையிலிருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர்.

விபத்து பற்றி தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோகர் தலைமையில் இரு வாகனங்களில் சென்று தீயை அணைத்து, இறந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்த கோவிந்தபாபுவையும் மீட்டனர்.

விபத்தில் நூறு சதவீதம் தீக்காயமடைந்த அவருக்கு, சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து, பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர் வைரமுத்துக்குமார் உள்ளிட் டோர் மீது மல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாய்லர் வெடித்து 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரத்தை அடுத்த கொட்டாரம் பகுதியில், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ராம்தாஸ் என்பவருக்கு சொந்தமான சென்ட் தொழிற்சாலை உள்ளது. இத் தொழிற்சாலையில் கிராம்பி லிருந்து சென்ட் தயாரிக்கப்படுகிறது. இங்கு, 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இங்குள்ள பாய்லர் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறியது. அதிலிருந்த சுடுநீர் கொட்டியதில் வி.கே.புரம் டாணா பகுதியைச் சேர்ந்த ஆழ்வார் மகன் முரளி கிருஷ்ணன் (35), அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி (25) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

ஆலை உரிமையாளர் ராம்தாஸ், இயக்குநர்கள் பாலச்சந்தர், கென்னடி ஆகியோர் மீது வி.கே.புரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x