Published : 27 Jan 2021 02:30 PM
Last Updated : 27 Jan 2021 02:30 PM

போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கும் முடிவை எதிர்த்து தீபக் வழக்கு: அவசர வழக்காக எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நாளை நினைவு இல்லமாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்கு உள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளதாக, அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டு நாளை திறக்கப்பட உள்ளது.

இந்த பின்னணியில், சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாராணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி, தீபக் தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கமான முறையில் அடுத்த திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x