Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM
வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு, வரும் 29-ம் தேதி நடக்கும் போராட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் என்று பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாமகவும், வன்னியர் சங்கமும் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தகட்டத்தை அடைந்துள்ளன. அதன்படி, வரும்29-ம் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்தலைநகரங்களிலும் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்படும்.
கடந்த 2 மாதங்களில் மட்டும்5 கட்டங்களாக 8 நாட்கள் வன்னிய மக்களின் சமூகநீதிக்காக நாம் தீவிரமாக போராடி வருகிறோம். ஒவ்வொரு கட்ட போராட்டமுமே மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றே வந்திருக்கின்றன. அந்தவகையில் 29-ம்தேதி மாவட்டஆட்சியர் அலுவலகங்கள் முன்புநடக்கவுள்ள 6-ம் கட்ட மக்கள்திரள்போராட்டமும் வெற்றி பெறப்போவது உறுதியிலும் உறுதி.
வன்னியர்கள் அல்லாத மற்ற சகோதர சமுதாயங்களுக்காகவும் நாம்தான் குரல் கொடுத்து வருகிறோம். இந்த உண்மைகளை எல்லாம் அவர்களுக்கு புரியவைத்து,வன்னியர் உள் ஒதுக்கீட்டு போராட்டத்தில் அவர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைப்பதை இனி எந்த சக்தியாலும் தாமதப்படுத்த முடியாது.பாட்டாளி இளைஞர்களின் உழைப்புக்கும், போராட்டத்துக்கும் பயன் கிடைக்கும் நாள் நெருங்கிவிட்டது. முழு உணர்வுடன் 29-ம் தேதி போராட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் பேர் என்ற அளவில் பங்கேற்க வேண்டும். அதன்மூலம் நமது இட ஒதுக்கீட்டு உரிமையை வென்றெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT