Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் அதிமுக நிர்வாகிகள் தீவிரம்

தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோரை கொண்டு அமைக்கப்பட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குழுவினர் கடந்த டிச.28-ம் தேதி ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அதன்பின், அறிக்கை தயாரிப்பு குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘திமுகவின் தேர்தல் அறிக்கையை விட மக்களை அதிகம் கவரும் வகையில் திட்டங்கள் இடம் பெற வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் பொதுக்குழுவில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்’’ என் றனர்.

திமுக தற்போது விவசாய கடன் ரத்து, நீட் தேர்வில் இருந்துவிலக்கு என்பதை முன்னிறுத்துகிறது. காங்கிரஸ் கட்சி, ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை குறிப்பிடுகிறது. எனவே, இவற்றையும் தாண்டி மதுவிலக்கை அமல்படுத்த டாஸ்மாக் கடைகளை மூடுவது, இலவச இணைய வசதி, பள்ளிகளில் உட்கட்டமைப்பு உள்ளிட்டவை பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளன. இதை நோக்கியே அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர்,அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தல்அறிவிப்புக்கு முன், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முதல்வரிடம் ஆலோசனை நடத்திஅறிக்கையை இறுதி செய்வார்கள் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x