Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

வட்டியில்லாமல் நகைக்கடன் கொடுப்பதாக மக்களிடம் மோசடி: ஜுவல்லரி உரிமையாளர் உட்பட 6 பேர் கைது

மேற்கு மாம்பலத்தில் வட்டியில்லாமல் நகைக்கடன் கொடுப்பதாகக் கூறி நகைகளை வாங்கி மோசடி செய்ததாக, ஜுவல்லரி உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோயில் பகுதியில் ‘ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் அண்ட் பேங்கர்ஸ்’ என்ற நிறுவனம் உள்ளது. இங்கு முஸ்லிம்களுக்கு மட்டும் வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் நகைகளை இங்கு அடமானம் வைத்தனர்.

இந்நிலையில் நிறுவனத்தை நடத்திவந்த சையது ரகுமான் மற்றும் அவருடைய தம்பி அனிசூர் ரகுமான் ஆகியோர் நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, நிறுவனத்தை நடத்திவந்த சையது ரகுமான் மற்றும் அவருடைய தம்பி அனிசூர் ரகுமான், வேலை செய்துவந்த ரிகானா என்கிற அருணா ராணி, சஜிதா என்கிற வளர்மதி, ஷஹுனா என்கிற சிவகாமி மற்றும் ரவி ஆகியோரை கைது செய்தனர். கைதான 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், ரூபி ராயல் ஜீவல்லர்ஸ் அண்ட் பேங்கர்ஸ் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி, ஏராளமான நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x