Last Updated : 26 Jan, 2021 06:35 PM

 

Published : 26 Jan 2021 06:35 PM
Last Updated : 26 Jan 2021 06:35 PM

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது: மனைவி பெருமிதம்

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி.

ராமநாதபுரம்

சீன மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரது மனைவி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் காஷ்மீர் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் வீரர் பழனி மட்டுமே. அதனையடுத்து வீரர் பழனியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அதனையடுத்து மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள் பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினர். தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரணமும், வீரர் பழனியின் மனைவிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கியது. இந்நிலையில் வீர மரணம் அடைந்த வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வீரர் பழனியின் மனைவி வானதி தேவியிடம் கேட்டபோது, ''எனது கணவரின் வீர தீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் கிடைத்த மரியாதை. நாட்டிற்காக அவர் செய்த சேவைக்குக் கிடைத்த இவ்விருதை பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். அவரது தியாகத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகளுக்கும், எனது கணவர் பணியாற்றிய 81 ஃபீல்ட் ராணுவப் பிரிவின் கமாண்டிங் ஆபீஸர் அஜய் மற்றும் விருது வழங்க வேண்டும் எனக் கடிதம் எழுதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x