Last Updated : 26 Jan, 2021 06:20 PM

 

Published : 26 Jan 2021 06:20 PM
Last Updated : 26 Jan 2021 06:20 PM

விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் துரதிர்ஷ்டவசமானது; மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன்

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் துரதிர்ஷ்டவசமானது. இப்பிரச்சினையில் மத்திய அரசு பேச்சுவார்த்தையின் மூலம் ஒத்த கருத்தை ஏற்படுத்தி நல்ல தீர்வு காண வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''இன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி, உச்ச நீதிமன்றத்தின் கோட்பாடுகளை மீறி விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் என்ற பெயரிலே ஆயிரக்கணக்கானோர் ஊடுருவி விவசாயிகளின் நற்பெயருக்குக் களங்கமும், நாட்டிற்கு அவமதிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இவர்களின் பின்னால் இருக்கும் கும்பல் யார், அவர்களின் நோக்கம் என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி விவசாயிகளே. மத்திய அரசு விவசாயிகளுடன் இதுவரை நடைபெற்ற 11 கட்டப் பேச்சுவார்த்தையில் கருத்து ஏற்படவில்லை. இருப்பினும் மத்திய அரசு இப்பிரச்சினையில் சுமுகத் தீர்வு ஏற்படுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறது.

மேலும், இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. உண்மை நிலை இதுவாக இருக்கும்போது நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் மற்றும் காவல்துறைக்கும் சவால்விடும் வகையிலே விவசாயிகளின் பெயரில், ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் நோக்கம் என்ன, விவசாயிகள் பெயரிலே ஒரு கும்பல் ஈடுபடுவதைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசிற்கு இப்போது ஏற்பட்டுள்ளது. எனினும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறக் கூடாது. விவசாயிகள் பேரணியிலே, காவல்துறையின் தடுப்புகளை மீறிய விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். காயம்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கும், பிரச்சினைகளுக்கும், நல்ல தீர்வு காண உடனடியாக மத்திய அரசு, விவசாயிகளுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஒத்த கருத்தை ஏற்படுத்தி நல்ல முடிவு காண வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x