Published : 26 Jan 2021 04:36 PM
Last Updated : 26 Jan 2021 04:36 PM

கள்ளச்சாரயம் ஒழிப்புப் பணியில் சிறப்பான செயல்பாடு: பெண் ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம்

சென்னை

கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்த, தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்காக வழங்கப்படும் காந்தியடிகள் காவலர் பதக்கம் பெண் ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.

காந்தியடிகள் காவலர் பதக்கம், கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்த தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு, ரூ.40,000/-க்கான காசோலையும் மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு இப்பதக்கம் கீழ்க்கண்ட காவல்துறை அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.

மகுடீஸ்வரி, பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, புனித தோமையர்மலை, தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல்.

மகுடீஸ்வரி, என்பவர் 15.09.2004 அன்று தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 14.04.2018 அன்று காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று தற்போது, புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் காவல் ஆய்வாளராக இருந்த காலத்தில், குற்ற தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 6 மற்றும் 11 தெளிந்த சாராவி விதிகளின் கீழ் வழக்கினைப் பதிவு செய்து கடத்தல் பொருட்களைக் கைப்பற்றி எதிரிகளைக் கைது செய்தது மட்டுமின்றி ஒரு ஆம்னி பேருந்து மற்றும் ஒரு சீருந்து ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளார்.

மேலும், 180 மி.லி. அளவு கொண்ட 1,297 பாட்டில்கள் மற்றும் 750 மி.லி. அளவு கொண்ட 470 பாட்டில்களைக் கைப்பற்றியுள்ளார். மேலும், இவர் 1,210 மதுவிலக்கு குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட பிரிவு 4(1)(ய) தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் 1,217 வழக்குகள் பதிவு செய்துள்ளார். அவற்றில், 217 வழக்குகள் நீதிமன்றத்தின் மூலம் தண்டனையில் முடிவடைந்தன.

புனித தோமையர்மலை, தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பெண் காவல் ஆய்வாளர், மகுடீஸ்வரி கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க பணி புரிந்தமைக்காக அவரது சிறப்புமிக்க பணியைப் பாராட்டும் வகையில் 2020ஆம் ஆண்டிற்கான காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

செல்வராஜூ, காவல் உதவி ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவு, சேலம் மண்டலம்

செல்வராஜூ, காவல் உதவி ஆய்வாளர் 09.06.1993 அன்று காவலராக பணியில் சேர்ந்து சிறப்பு பாதுகாப்புக் குழுமம் (முதல்வர் பாதுகாப்பு பிரிவு) கமாண்டோ பிரிவு, கியூ பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவு ஆகிய இடங்களில் சிறப்பாகப் பணிபுரிந்து 2008ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து, 12.11.2018 முதல் மத்திய புலனாய்வுப் பிரிவு சேலம் மண்டலத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் சேலம் மண்டலத்தில் மதுவிலக்கு குற்றங்களை ஒழிக்க முயற்சி மேற்கொண்டார். இவர், நம்பகமான தகவலர்கள் மற்றும் புதிய யோசனைகளையும் கொண்டு வெளிமாநில மதுபான வகைகள் மற்றும் சாராயத்தைக் கடத்தி வந்த மதுவிலக்கு குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, இதன் காரணமாக 3 போலி மதுபான தயாரிப்பு கூடங்கள், 66,985 லிட்டர் எரி சாராயத்தையும், 8,736 போலி மதுபான பாட்டில்களையும், 2,400 கோவா போலி மதுபான பாட்டில்களையும், 2,160 கர்நாடக மாநில மதுபான பாட்டில்களையும், 462 புதுச்சேரி மதுபான பாட்டில்களையும், 350 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களையும் கைப்பற்றியுள்ளார். மேலும், 12 நான்கு சக்கர வாகனங்கள், 14 இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றி, 51 குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து, அதில் 8 கள்ளச்சாராயக்காரர்கள் தமிழ்நாடு சட்டம் 14/1982-ன் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மண்டலம், மத்திய புலனாய்வுப் பிரிவு, காவல் உதவி ஆய்வாளர், சூ.செல்வராஜூ கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க பணி புரிந்தமைக்காக அவரது சிறப்புமிக்க பணியைப் பாராட்டும் வகையில் 2020ஆம் ஆண்டிற்கான காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

சண்முகநாதன், தலைமைக் காவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையம், அயல் பணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்

சண்முகநாதன் என்பவர் 31.10.1997 அன்று தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்து, 2018ஆம் ஆண்டு முதல் தலைமைக் காவலர் பதவி உயர்வு பெற்று தற்போது விருதுநகர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முகாம் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது பணிக்காலத்தில் தமிழ்நாடு சட்டம் 14/1982-ன் கீழ் பல்வேறு குற்றவாளிகளைக் கைது செய்ய ஆய்வாளர்களுக்கு உதவி புரிந்துள்ளார்.

மதுபானக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வாகனங்களான 172 இரண்டு சக்கர வாகனங்களையும், 07 மூன்று சக்கர வாகனங்களையும், 19 நான்கு சக்கர வாகனங்களையும் கைப்பற்றி பறிமுதல் செய்ய பல ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்துள்ளார். மேலும், கரோனா ஊரடங்கு சமயத்தில், நாட்டுச் சாராயம் காய்ச்சுவதற்குப் போடப்பட்ட 3,000 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தும், 50 லிட்டர் நாட்டுச்சாராயத்தை கைப்பற்றியும், எதிரிகளைக் கைது செய்துள்ளார். இவர், நடப்பாண்டில் 7 வெகுமதிகள் உட்பட மொத்தம் 30 வெகுமதிகளைப் பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா காவல் நிலையம், அயல் பணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், தலைமைக் காவலர் சண்முகநாதன் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க பணி புரிந்தமைக்காக அவரது சிறப்புமிக்க பணியைப் பாராட்டும் வகையில் 2020ஆம் ஆண்டிற்கான காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

ராஜசேகரன், தலைமைக் காவலர், கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம், அயல்பணி, மத்திய புலனாய்வுப் பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம்

ராஜசேகரன், தலைமைக் காவலர் 01.01.2019 அன்று தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்று தற்போது, மத்திய புலனாய்வுப் பிரிவு, வேலூர் மண்டலத்தில் 07.07.2018 முதல் பணிபுரிந்து வருகிறார். இவரது பணிகாலத்தில் 29.09.2018 அன்று எரிசாராயம் கடத்தி விற்பனை செய்யும் நபர்களைக் குறித்த தகவல்களை உரிய தகவலாளர்கள் மூலம் அறிந்தும், இவரது தலைமையில் மங்கலம் காவல் நிலையம் எரும்பூண்டி கிராமம் மண்ணு என்பவரின் விவசாய நிலத்தில் சோதனை செய்ததில் 143 வெள்ளை நிற பிளாஸ்டிக் கேனில் 5,005 லிட்டர் எரிசாராயத்தைக் கடத்தி வந்த இரு குற்றவாளிகளான கணேஷ் மற்றும் லோகநாதன் என்பவர்களை 18.09.2019 அன்று கைது செய்ய ஆய்வாளருக்கு உதவியாக இருந்துள்ளார்.

மேலும், ஆரணி தாலுக்கா நெசல் கிராமம் அருகில் மத்திய புலனாய்வுப் பிரிவுக் குழுவுடன் இணைந்து டேங்கர் லாரியுடன் கூடிய 20,000 லிட்டர் எரிசாராயமும், 12 வாகனங்களும் கைப்பற்றியுள்ளனர். வேலூர் மாவட்டம் அருகில் திருப்பத்தூர்-மாத்தூர் பிரதான சாலையில் 11.05.2019 அன்று வாகன தணிக்கை செய்தபோது ஒரு மாருதி சுசுக்கி ஆல்டோ வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, கடத்தி வரப்பட்ட 180 மிலி அளவுகொண்ட 1,440 போலி மதுபான பாட்டில்களை வாகனத்துடன் கைப்பற்றி இரு நபர்களைக் கைது செய்துள்ளார்.

மேலும், இவரது பணிக் காலத்தில் 42 இரு சக்கர வாகனங்கள், 14 நான்கு சக்கர வாகனங்கள், 180 மி.லி. அளவுகொண்ட 1,342 பாண்டிசேரி மாநில மதுபான பாட்டில்கள், 26,600 லிட்டர் எரிசாராயம், போலி லேபிள்கள், போலி ஹாலோகிராம்கள் மற்றும் மூடிபோடும் இயந்திரங்கள் ஆகியவற்றை வேலூர் மண்டலத்தில் கைப்பற்ற உதவியாக இருந்துள்ளார்.

ராஜசேகரன் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க பணி புரிந்தமைக்காக அவரது சிறப்புமிக்க பணியைப் பாராட்டும் வகையில் 2020ஆம் ஆண்டிற்கான காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x