Published : 26 Jan 2021 04:08 PM
Last Updated : 26 Jan 2021 04:08 PM

கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் பச்சை சார்த்தி தரிசனம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச விழாவில் சுவாமி சண்முகருக்கு பச்சை சார்த்தி தரிசனத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது.

கோவில்பட்டி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவில் இன்று சண்முகர் வெள்ளி சப்பரத்தில் பச்சை மலர் சூடி திருமால் அம்சமாகவும், வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தார்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல், விளா, காலசந்தி பூஜைகள் மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வருகிறது. இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.

தைப்பூசத் திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர்கள் சார்த்தி சூடி சிவன் அம்சமாக (ருத்திரர்) வீதியுலாவும், வெள்ளை மலர்கள் சார்த்தி பிரம்மன் அம்ச வீதியுலாவும் நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு பச்சை சார்த்தி திருமால் அம்சமாக வள்ளி, தெய்வானையுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இதையொட்டி நேற்று இரவு முதல் கோயில் நடை இரவு முழுவதும் சாத்தப்படவில்லை.

இதில், ரெட்டியார் சமுதாய தூத்துக்குடி மாவட்ட இளைஞரணித் தலைவர் மகேஸ்வரன் மற்றும் தொழிலதிபர் கந்தசாமி, கழுகுமலை ரெட்டியார் மண்டப நிர்வாகி ராமசாமி, முருகன், காலாங்கரைப்பட்டி, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், வட்டார ரெட்டி சமுதாயத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது.

தைப்பூசத் தேரோட்டம் நாளை மறுநாள் (28-ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x