Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

சிட்லபாக்கம் பேரூராட்சியில் 3,500 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கிவைத்தார்

சிட்லபாக்கம் பேரூராட்சியில் புதிதாக 3,500 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஆணையை பயனாளிகளிடம் வழங்கினார். படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்

தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சியில் புதிதாக 3,500 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சிட்லபாக்கத்தில் அனைத்து குடிநீர் இணைப்புகளும், 2 மாதங்களுக்குள் வழங்கி முடிக்கப்படும். சிட்லபாக்கத்தில் 100-க்கு 52 சதவீதம் பேருக்கு, குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் தொடக்கப்பட்டுள்ளன. இணைப்பு கொடுத்து முடிக்கப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் நாங்கள் செய்யும் பணிகளால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை தாங்க முடியாமல், திமுகவினர் உள்ளனர்.

4 மாதங்களுக்குப் பின்பும், நாங்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். முதல்வரின் பிரச்சார ரதம் செல்லும் இடங்களில் எல்லாம், பெரிய எழுச்சி உள்ளது என்றார்.

இந்நிலையில் சிட்லபாக்கம் பேரூராட்சியில் தனி வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் பற்றிபேரூராட்சி நிர்வாகம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. மாறாக 2 மாதங்களில் வழங்கப்படும் என மட்டுமே தெரிவித்திருக்கின்றனர். ஏற்கெனவே குடிநீர் இணைப்பு வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் தற்போதுதான் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாததால், குடியிருப்பு வாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே தனி வீடுகளுக்கு வழங்கப்படுவதுபோல் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமென குடியிருப்போர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக தனி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இணைப்பு வழங்கப்படும். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x