Last Updated : 25 Jan, 2021 09:00 PM

 

Published : 25 Jan 2021 09:00 PM
Last Updated : 25 Jan 2021 09:00 PM

காதல் திருமணம் செய்துகொண்ட உயர வளர்ச்சி தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகள்: உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து

சிவகங்கை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட உயர வளர்ச்சி தடைப்பட்ட (மூன்றரை அடி உயர) மாற்றுத்திறனாளிகளை உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

சிவகங்கை அருகே ஒக்கூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபாண்டி மகன் சின்னக்கருப்பு (24). மூன்றரை அடி உயரமே உள்ள இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆடு, மாடு மேய்த்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் ஆனந்தவள்ளிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரால் வீட்டு வேலைகளைச் செய்ய முடியவில்லை.

இதையடுத்து 22 வயதான இவரது தம்பி மணிகண்டனுக்குத் திருமணம் செய்துவைக்கப் பெற்றோர் முடிவு செய்தனர். இதையறிந்த சின்னக்கருப்பு தனக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கூறியுளார். ஆனால் ‘வருமானம் இல்லாத உனக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள்’ என்று கூறி திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே பஞ்சம்தாங்கி பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சின்னக்கருப்பு சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் மகள் பஞ்சு (20) என்பவரைச் சந்தித்துள்ளார். அவரும் 9-ம் வகுப்பு வரை படித்த, உயர வளர்ச்சி தடைப்பட்ட, மூன்றரை அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளி. இதனால் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் திருமணம் செய்துகொள்ள இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. மனம் தளராமல் நண்பர்கள் மூலமாகத் தொடர்ந்து பேசி இருவரும் தங்களது பெற்றோரிடம் சம்மதம் பெற்றனர். இதையடுத்து இன்று ஒக்கூர் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்திச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x