Published : 25 Jan 2021 04:48 PM
Last Updated : 25 Jan 2021 04:48 PM

வாக்காளர் அடையாள அட்டை பெற 3 புதிய முறைகள்; ஆன்லைன் மூலமாக மாவட்ட வாரியாக எளிய வசதி அமல்: சத்யபிரதா சாஹு பேட்டி

சென்னை

தேசிய வாக்காளர் தினமான இன்று வாக்காளர் அடையாள அட்டையை எளிதில் பெறும் முறை அமல்படுத்தப்பட்டது. அதற்கான எபிக் மெஷினை ஆளுநர் இன்று தொடங்கி வைத்தார்.

இனி செல்போன் மூலமாகவே வாக்காளர் அடையாள அட்டையைப் பெறலாம் எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் வாக்காளர்கள் அடையாள அட்டை பெறும் புதிய முறையை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''இன்றிலிருந்து வாக்காளர்கள், அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, வாக்காளர் அடையாள அட்டையை ஸ்பீடு போஸ்ட் மூலம் பெறலாம். பெயர்ப் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுக்கப் போகிறோம்.

வாக்காளர் அடையாள அட்டைக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள், தொலைந்துபோன, மாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர் அடையாள அட்டைகளை இ-எபிக் கார்டு முறையில் பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்து தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் ஆன்லைனில் அப்ளை செய்து எ-எபிக் மற்றும் பிடிஎஃப் முறையில் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற வாக்காளர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்கக் கூடாது என்பதற்காக 3 முறைகளில் இதைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெஷினில் பிரிண்ட் அவுட் எடுக்க, நம்மிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், நாம் தேர்தல் ஆணைய இணையதளப் பக்கம் சென்று நமது பெயரையும், வாக்காளர் பட்டியலில் நமது பெயருக்காக உள்ள பதிவு எண்ணையும் பதிவு செய்தால் உடன் கார்டு விவரம் வரும். பின்னர் அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் கட்டினால் அதன் பின்னர் அதில் வரும் விவரத்தை மெஷின் முன் உள்ள ஹாரிஃபைட் ரீடர் முன் காட்டினால் கார்டு பிரிண்ட் அவுட் கிடைத்துவிடும்.

இதற்கான கட்டணம் நிர்ணயிப்பது சம்பந்தமான வேலைகள் நடந்து வருகின்றன. அது விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்கான மெஷின்கள் விரைவில் மாவட்டந்தோறும் அனுப்பி வைக்கப்படும். இன்றுதான் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்குள் இது நடைமுறைக்கு வரும். அதே தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் இந்த நடைமுறையைப் பின்பற்றலாம்''.

இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x