Last Updated : 25 Jan, 2021 03:50 PM

 

Published : 25 Jan 2021 03:50 PM
Last Updated : 25 Jan 2021 03:50 PM

நாளை சிதம்பர ரகசியங்களை வெளியிடுவோம்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அறிவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு முதுகலை மாணவர்கள் வகுப்பு நடத்தினர்.

கடலூர்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்றுடன் 48-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் குடியரசு தினமான நாளை (ஜன.26) சிதம்பர ரகசியம் இரண்டை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை, தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி இன்றுடன் 48-வது நாளாகப் பல்வேறு நூதன முறைகளில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் (ஜன.23) மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்து அடிப்படை வசதிகளையும் தடை செய்தது. இதனால் பாதிப்படைந்த மாணவர்கள் விடுதி அருகில் காலி வாளியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று (ஜன.24) சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தலைமையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, மருத்துவக் கல்லூரிக் கண்காணிப்பாளர் டாக்டர் நிர்மலா ஆகியோர் மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (ஜன.24) தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் புலிகேசி, மாவட்டச் செயலாளர் குலோத்துங்கன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று (ஜன.25) போராட்டக் களத்தில் மாணவர்களுக்கு முதுகலை மாணவர்கள் வகுப்புகள் எடுத்தனர். எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்த மாணவர்கள், ''சிதம்பர ரகசியம் என்பது நடராஜர் கோயிலில் உள்ளது. நாங்கள் சிதம்பர ரகசியம் இரண்டை நாளை (ஜன.26) நாளை வெளியிட உள்ளோம். இதுகுறித்த நோட்டீஸ்கள் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x