திருமங்கலம் அருகே ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் இரண்டு லட்சம் மக்கள் பங்கேற்பார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

ஜெயலலிதா கோயில் திறப்பு விழா அழைப்பிதழை திருமங்கலம் பகுதி மக்களிடம் அளித்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
ஜெயலலிதா கோயில் திறப்பு விழா அழைப்பிதழை திருமங்கலம் பகுதி மக்களிடம் அளித்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஜன.30-ம் தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 7 அடி உயரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் வளாகத்தில் தியான மண்டபம், பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா கோயிலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரும் 30-ம் தேதி திறந்து வைக்கின்றனர். திருமங்கலம் தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து திறப்பு விழா அழைப்பிதழை அமைச்சர் உதயகுமார் வழங்கி வருகிறார்.

விழாவுக்கான முகூர்த்தக்கால் பந்தல் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்தாலும், அவர்களை தெய்வமாகத் தொண்டர்கள் வணங்குவதில்லை. அதிமுகவில்தான் தலைவர்களை தெய்வமாகத் தொண்டர்கள் வணங்குகின்றனர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மதுரை மக்களை மிகவும் நேசித்தனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மதுரையில்தான் முதல்வர் பழனிசாமி தொடங்கினார்.

ஜன.30-ம் தேதி நடைபெறும் கோயில் கும்பாபிஷேக விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள். அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வரும், துணை முதல்வரும் வழங்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in