Published : 16 Nov 2015 06:34 PM
Last Updated : 16 Nov 2015 06:34 PM

மழை நிவாரணத் தொகை, சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.500 கோடி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும், உடனடி சீரமைப்புப் பணிகளுக்காகவும் ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு நான் உத்தரவு பிறப்பித்திருந்தேன்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பருவகாலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டி தீர்க்கும் போது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் மழைநீர் தேங்குவது மற்றும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும். வெள்ளம் மற்றும் சேதங்கள் ஏற்பட்ட இடங்களில் துரிதமாக மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளள.

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், திருக்கழுக்குன்றம் மற்றும் மாமல்லபுரம்; திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி, தாமரைப்பாக்கம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், மற்றும் சோழவரம்; விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஒரே நாளில் 23 செ.மீ. முதல் 37 செ.மீ. வரை மழை பெய்துள்ளது.

தடையற்ற மின்சாரம்...

இவ்வாறு, மிக அதிக அளவு மழை பெய்த காரணத்தால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் அடங்கிய குழுவினை நான் உடனடியாக அனுப்பி வைத்தேன்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரடி பார்வையில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக கடலூர் மாவட்டத்திலுள்ள 683 கிராம ஊராட்சிகளில் 671 கிராம ஊராட்சிகளில் மின் விநியோகம் சரிசெய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

நிவாரணத் தொகை வழங்கல்...

மின் விநியோகம் இல்லாத கிராமங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டு சாலைப் போக்குவரத்து சீரான முறையில் நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையும்; குடிசைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள்..

40 மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 121 சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசியும், குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளள. கால்நடை தீவனங்களும் விலை ஏதுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.மேலும், 70 நிவாரண முகாம்கள் மூலமாக 58,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட 587 இடங்களில், 207 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 380 இடங்களில் மாநகராட்சிப் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகரத்தில் உள்ள சுரங்கப்பாதைகளில், 6 சுரங்கப்பாதைகளைத் தவிர மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தேங்கியிருந்த நீர் வெளியேற்றப்பட்டு, சாலைப் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசித்த 5,335 நபர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக 16 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி மூலம் 101 இடங்களில் 90,000 உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெருமழையால் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 57 நிவாரண முகாம்கள் மூலமாக 18,051 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட தீர்த்தங்கரை, ராலபாடி, ஜாகிர்மங்கலம், பஞ்செட்டி, பட்டரைபெரும்புதூர் போன்ற இடங்களில் வசித்த 2,958 நபர்கள் மீட்கப்பட்டு 57 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூர், ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் போன்ற நகரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அதிகத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலமாக வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட ஏரிக்கரைகளை பலப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராணுவ உதவியுடன்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வரதராஜபுரம் போன்ற இடங்களில் 60 முகாம்கள் அமைக்கப்பட்டு 16,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் கடலோரக் காவல்படை மூலமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்திற்கு மீட்புப் பணிகளில் உதவிடும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 160 நபர்கள் கொண்ட 9 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 60 நபர்கள் கொண்ட 3 குழுக்களும், கடலோர காவல் படையினைச் சார்ந்த 87 நபர்கள் கொண்ட 5 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவன்றி, சென்னை மாநகரில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சார்ந்த 43 குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தாம்பரம் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்பதற்கு ராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) நான் சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளை பற்றி எடுத்துக் கூறியும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு செய்து கொடுக்கும் என்ற உறுதியையும் அளித்துள்ளேன்.

ரூ.500 கோடி ஒதுக்கீடு...

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஏற்கெனவே அறிவித்தபடி நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கு என 500 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கி நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன் அடிப்படையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நிவாரணம் மற்றும் சீரமமைப்புப் பணிகளை மேலும் விரைந்து செயல்படுத்த அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x