Published : 24 Jan 2021 11:50 AM
Last Updated : 24 Jan 2021 11:50 AM

மானாமதுரை தொகுதியை குறி வைக்கும் பாஜக தொடர்ந்து 4 முறை வென்ற அதிமுக அதிர்ச்சி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியை பாஜகவினர் குறி வைத் துள்ளதால், அத்தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றிபெற்ற அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.1952-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு தேர்தல் வரை மானாமதுரை பொதுத் தொகுதியாக இருந்தது. 1977-க்கு பிறகு தனித்தொகுதியாக மாறியது. 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் இளையான்குடி தொகுதி கலைக்கப்பட்டு மானாமதுரை தொகுதியோடு இணைக்கப்பட்டது. இதுவரை 15 பொதுத் தேர்தல் களையும், ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்த இத்தொகுதியில், 3 முறை காங்கிரசும், தலா 2 முறை சுதந்திரா கட்சி, திமுகவும், 6 முறை அதிமுகவும், தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சுயேச்சை தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.

2016-ம் ஆண்டு வெற்றிபெற்ற மாரியப்பன் கென்னடி அமமுகவுக்குச் சென்றதால் பதவி இழந்தார். அதை யடுத்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.நாகராஜன் வெற்றி பெற்றார். கடந்த 2006, 2011, 2016, 2019 (இடைத்தேர்தல்) என 4 தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றது. கடந்த 2001 தேர்தலில் கூட அதிமுக கூட்டணியில் தமாகா வென்றது. இதனால் மானா மதுரை அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் மானாமதுரை தொகுதி யில் பாஜக போட்டியிட போவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். அதுவும் முக்கிய நிர்வாகி ஒருவர் நிற்கப் போவதாக வெளிப்படையாகவே பேச தொடங்கி உள்ளனர். அதிமுகவில் நடப்பு எம்எல்ஏ நாகராஜன், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, முன்னாள் திருப்புவனம் ஒன்றியக் குழுத் தலைவர் பாக்கியலட்சுமி அழகுமலை தங்களது ஆதரவாளர்கள் மூலம் தலைமையிடம் சீட் கேட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் மானாமதுரை தொகுதியை பாஜக குறி வைத்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து 4 முறை வென்ற தொகுதியை தலைமை விட்டுக் கொடுக்காது என உள்ளூர் அதிமுகவினர் நம்பிக்கையுடன் தேர்தல் பணியைத் தொடங்கி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x