Last Updated : 24 Jan, 2021 11:45 AM

 

Published : 24 Jan 2021 11:45 AM
Last Updated : 24 Jan 2021 11:45 AM

சிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்வதில் தொடரும் இழுபறி: தலைநகராக இருந்தும் அந்தஸ்து இல்லை

சிவகங்கை

சிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், தலைநகராக இருந்தும் அதற்குரிய அந்தஸ்தை பெற முடியாத நிலை உள்ளது. சிவகங்கை நகராட்சி 1964- ம் ஆண்டு நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1985-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட தலைநகராக மாறியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல்நிலை நகராட்சியாகத் தரம் உயர்ந்தது.

அதன்பிறகு நகர் விரிவாக்கப் பகுதிகளை இணைக்காததால் தற்போது வரை முதல்நிலை நகராட்சியாகவே உள்ளது. ஏழு கி.மீ. சுற்றளவுள்ள சிவகங்கை நகராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42 ஆயிரம் பேர் உள்ளனர். நகராட்சிக்கு தொழில், சொத்து, குடிநீர் வரி மூலம் ரூ.5 கோடிக்கும் குறைவாகவே வருவாய் வருகிறது. இதையடுத்து வரி வருவாயை அதிகரிக்க, நகரின் விரிவாக்கப் பகுதிகளை இணைக்க நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.

அதன்படி, சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி முழு ஊராட்சிப் பகுதிகள், கொட்டகுடி கீழ்பாத்தி ஊராட்சியில் கொட்டகுடி, சூரக்குளம் - புதுக்கோட்டை ஊராட்சியில் ராகிணிப்பட்டி, பையூர், இடையமேலூர் ஊராட்சியில் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 33 வார்டுகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பகுதிகளை இணைப்பதற்கான தீர்மானம் 2014-ம் ஆண்டு அப்போதைய நகராட்சித்தலைவர் அர்ச்சுணன் தலைமையில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த கோப்பு இன்று வரை கிடப்பில் உள்ளதால் தலைநகரான சிவகங்கை அதற்கான அந்தஸ்தை பெற முடியாமல் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சிவகங்கை நகராட்சி-42,053 பேர், காஞ்சிரங்கால்- 4,130 பேர், வாணியங்குடி 5,582 பேர் மற்றும் பையூர், ராகிணிப்பட்டி, காந்திநகர் பகுதிகளில் 1,400 பேர் என, 53 ஆயிரம் பேர் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி விரிவாக்கப் பகுதிகளை இணைத்தால் நகராட்சி மக்கள் தொகை ஒரு லட்சத்தை எட்டும். மேலும் வருவாயும் ரூ.8 கோடியாக அதிகரிக்கும்.

இக்கோரிக்கை 2014, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதானமாக இடம் பெற்றது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி யினரும் தேர்தல் வாக்குறுதியாக அளித் தனர். ஆனால் அதன்பிறகு அரசியல் அழுத்தம் இல்லாததால் விரிவாக்கப் பகுதிகள் இணைக்கப்படாமலும், தரம் உயர்த்தப்படாமலும் சிவகங்கை நகராட்சி இருந்து வருகிறது.

இதனால் வரி வருவாய் பற்றாக்குறையால் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. மேலும் இடப் பற்றாக்குறையால் புதிய பஸ் நிலையம் போன்ற திட்டப் பணிகளைத் தொடங்குவதிலும் சிக்கல் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: விரிவாக்கப் பகுதிகளை இணைக்க வலியுறுத்தி 6 ஆண்டுகளுக்கு முன்பே கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் விரிவாக்கம், தரம் உயர்வு குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x