Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM
மீனவர்கள் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், மீனவர்கள் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மீன்வளத் துறை உதவி இயக்குநர் வேலன் மீனவ சங்க தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்திய கடற்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கும் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்திய கடலோர காவல் படையினரால் வரும் 25-ம் தேதி (நாளை) தீவிர சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது.
எனவே, நாளை கடலோர பாதுகாப்பு படையினராலும் கடலோர பாதுகாப்பு குழுமத்தாலும் மீன்பிடி விசைப்படகுகள், நாட்டுப்படகுகளும் சோதனையிடப்படும் என்பதால் அசல் அடையாள அட்டைகள் மற்றும் படகு தொடர்பான ஆவணங்களை உடன் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், மீன்பிடி படகு, நாட்டுப் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சாதனைங்களை பயன்படுத்தும் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT