Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

5 ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் இயங்கும் காயார் காவல் நிலையம்: நிலம், நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் கடந்தும் புதிய கட்டிடம் இல்லை

காயார் கிராமத்தில் சமுதாயக் கூடத்தில் இயங்கி வரும் காயார் காவல் நிலையம்.

திருப்போரூர்

காயார் கிராமத்தில் 5 ஆண்டுகளாக சமுதாய நலக் கூடத்தில் இயங்கி வரும் காயார் காவல் நிலையத்துக்கு, காவலர் குடியிருப்புடன் கூடிய காவல் நிலைய கட்டிடம் அமைக்க நிலம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து 4 ஆண்டுகள் கடந்தும், புதிய கட்டிடப் பணிகள் தொடங்கப்படவில்லை.

திருப்போரூர் ஒன்றியம் காயார் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 2015-ம் ஆண்டு புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இக்காவல் நிலைய எல்லையில் காயார், வெண்படு, பனங்காட்டுப்பாக்கம் உள்ளிட்ட 27 கிராமங்கள் அடங்கியுள்ளன.

இந்த காவல் நிலையம் தற்காலிகமாக சமுதாய நலக் கூடத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. 5 ஆண்டுகளாக இடப்பற்றாக் குறையுடன் செயல்படும் இக்காவல் நிலையத்தில் காவலர் குடியிருப்பு போன்றவசதிகள் இல்லாததால், காவலர்கள் பல கி.மீ. தொலைவில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று திரும்பும் நிலை உள்ளது.

இதனால், இரவு நேரத்தில் ரோந்து மற்றும் காவல் நிலைய பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த 2017-ம்ஆண்டு காவலர் குடியிருப்புடன் கூடிய புதிய காவல் நிலைய கட்டிடம் அமைக்க, காட்டூர் பேருந்து நிறுத்தம் பின்புறம் நிலம் ஒதுக்கப்பட்டது. மேலும், புதிய கட்டிடங்கள் அமைக்க காவல் துறை சார்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் காயார் காவல் நிலையத்துக்கான புதிய கட்டிட பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.

இதனால், கடந்த 6 ஆண்டுகளாக சமுதாய நலக்கூட கட்டிடத்தை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, காயார் கிராம மக்கள் கூறும்போது, "காயார் கிராம மக்களின் பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், 6 ஆண்டுகளாக மேற்கண்ட கட்டிடத்தில் காவல் நிலையம் இயங்கி வருவதால், கிராம மக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக 15 கி.மீ. தொலைவில் உள்ள திருப்போரூர், கண்டிகை, கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக் காலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்கவைக்கவும் இட வசதியில்லைஎன்றனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அலுவலக வட்டாரங்கள் கூறும்போது, "காயார் காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் தாமதம் அடைவது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x