Last Updated : 23 Jan, 2021 07:50 PM

 

Published : 23 Jan 2021 07:50 PM
Last Updated : 23 Jan 2021 07:50 PM

கேரள, தமிழக தேர்தலில் தோற்றால் தான் பாஜக-வின் ஆணவம் அடங்கும்: ப.சிதம்பரம் பேச்சு

‘‘கேரளா, தமிழக தேர்தலில் பாஜக தோற்றால் தான் அதன் ஆணவம் அடங்கும்,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அவர் மானாமதுரையில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை. அதிமுகவை 3 மாதங்களிலும், பாஜகவை 3 ஆண்டுகள் கழித்தும் தோற்கடிக்க வேண்டும். தேர்தலை அதிமுக, பாஜக அதிகார, பணப்பலத்துடனும், அதிகார துஷ்பிரயோகத்துடனும் சந்திக்க உள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மோடி அலை என்றார்கள் அதை கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய தென்மாநிலங்கள் தடுத்து நிறுத்தின. தற்போது கேரளா, தமிழகத்தில் தேர்தலில் பாஜக தோற்றால், அதன் கொட்டம் கொஞ்சம் அடங்கும். இல்லாவிட்டால் ஆணவம், அகந்தையை அடக்க முடியாது.

ஒரு கட்சி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், நான் தான் நிரந்தர முதல்வர், நான் தான் நிரந்த பிரதமர் என்ற ஆணவம் வந்துவிடும். அமெரிக்கர்கள் புத்திசாலி அதனால் தான் 8 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்காத அளவிற்கு சட்டம் வைத்துள்ளனர்.

பாஜகவை அகில இந்திய அளவில் எதிர்க்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. மதுரை எம்.பி கடிதம் எழுதினால், மத்திய அமைச்சர் இந்தியில் பதிலளிக்கிறார். தமிழக முதல்வர் தாயார் இறந்ததற்கு கூட அமித்ஷா இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால் என்ன ஒரு ஆணவம்.

சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி நிறுவனத்தை மைசூருவில் உள்ள பல மொழி நிறுவனத்தின் ஒரு இலக்காவாக சேர்க்க உள்ளனர். இதை ஏற்க முடியுமா? இந்தி அல்லாத பிற மொழியை மேம்படுத்த ரூ.22 கோடி ஒதுக்கினர். ஆனால் சமஸ்கிருதத்திற்கு ரூ.ஆயிரம் கோடி ஒக்கியுள்ளனர்.

தமிழகத்தில் 8 கோடி பேரில் 811 பேர் தான் சமஸ்கிருதம் பேசுகின்றனர். அவர்களுக்காக பொதிகை டிவியில் 15 நிமிடங்கள் செய்தி வாசிக்கின்றனர். இந்தியாவில் மூத்த நாகரீகம் தமிழ் என்பதை அறிய வேண்டுமென்றால் கீழடிக்கு சென்று பாருங்கள். பழனிசாமிக்கு பாஜகவை கண்டாலே 99 சதவீதம் பயம். ஒரு சதவீதம் பக்தி.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட ரூ.50 இருந்தால் போதும். அதற்கு எதற்கு முதல்வர் செலவழித்துக் கொண்டு பிரதமர் கூப்பிடப் போகிறார். பழனிசாமி அடிக்கல் நாட்டினால் கல் நிற்காதா.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வட்டாரத் தலைவர் ஆரோக்கியதாஸ், எஸ்சி, எஸ்டி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ், சட்டப்பேரவை பொறுப்பாளர் சஞ்சய்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x