Published : 23 Jan 2021 12:02 PM
Last Updated : 23 Jan 2021 12:02 PM

சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் குறித்த ஆய்வு மையம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில், டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டதை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இம்மையத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

''முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (22.1.2021) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தைத் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் கடந்த 7.9.2018 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கடந்த வைர விழா ஆண்டு நிறைவு விழாவில் பேசும்போது, "சென்னைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது.

அந்த வகையில், இப்பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றினைக் குறிக்கும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்றும், இம்மையத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆரின் முன்னோடி திட்டங்களான சத்துணவு திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தைத் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு எம்.ஜி.ஆரின் பங்களிப்பை ஆராயும் முதல் உயர்கல்வி நிறுவன ஆராய்ச்சி மையமாக இம்மையம் விளங்கும். மேலும், எம்.ஜி.ஆர். ஆட்சி புரிந்த பத்து ஆண்டுகளில் அவர் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டுகள், பொது நிர்வாகம், திரைப்படத் துறை போன்றவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாகவும் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள், எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல், எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தின் தொடக்கம் முதல் இன்றைய வளர்ச்சி வரை வரலாற்று ரீதியில் ஆராய்தல், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித் துறையில் ஏற்பட்ட மேம்பாடுகளை ஆராய்தல், எம்.ஜி.ஆர். பெண்கள், நலிவுற்றோர், பின்தங்கிய மக்களின் உயர்வுக்கு ஏற்படுத்திய திட்டங்கள், அவற்றின் வெற்றி பற்றி ஆராய்தல், பொது நிர்வாகத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு குறித்து ஆராய்தல் போன்ற ஆய்வுப் பணிகள் இந்த ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படும்''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x