

தீயணைப்பு அவசர கால உதவி செயலி குறித்த விழிப்புணர்வு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தீயணைப்புத் துறை சார்பில் அவசர கால உதவிஅழைப்புக்கான ‘தீ’ (Thee) எனும் பிரத்யேக செயலி வெளியிடப்பட்டுஉள்ளது.
காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இந்த செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதேபோல் உத்திரமேரூர், பெரும்புதூர் தீயணைப்பு நிலையங்களிலும், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் இந்தச் செயலிகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இச்செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
தீயணைப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அவசரகால உதவி அழைப்புக்கான பிரத்யேகசெயலி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மாமல்லபுரம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி அலுவலகம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிவீரர்கள், அவசரகால அழைப்புக்கான செயலியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
மேலும், செயலியை பதிவிறக்கம் செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் செயலியில் அழைத்தால் அடுத்த 5 விநாடியில் தீயணைப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து செயல் முறையில் விளக்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும்பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, மாமல்லபுரம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சிவசங்கரன் கூறும்போது, "இந்தச் செயலியில்உள்ள உதவி என்ற பொத்தானைஅழுத்தினால் அடுத்த 5 விநாடிகளில் தீயணைப்புத் துறையினர், அவர்களை தொடர்புகொண்டு உதவி செய்ய முடியும்.
இச்செயலி குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அனைவரும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது" என்றார்.