Published : 22 Jan 2021 08:38 PM
Last Updated : 22 Jan 2021 08:38 PM

தீ வைத்துச் சித்திரவதை செய்ததில் காட்டு யானை பலி: இருவர் கைது

கைது செய்யப்பட்ட ரிசார்ட் உரிமையாளர் ரைமண்ட் டீன் மற்றும் பிரசாந்த்.

உதகை

மசினகுடியில் ஆண் காட்டு யானையை சில மர்ம நபர்கள் தீ வைத்துச் சித்திரவதை செய்ததால், படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக இருவரைக் கைது செய்து, உதகை வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த மாதம் ஆண் காட்டு யானை காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்தது. இந்நிலையில், அந்த யானை மீது கடந்த 17-ம் தேதி தீப்பந்தத்தை மர்ம நபர்கள் வீசியதில், அதன் இடது காதில் காயம் ஏற்பட்டது. இதனால் யானைக்குத் தீவிர‌ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், அந்த யானையைப் பிடித்து முதுமலையிலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்லவும் திட்டமிட்டனர். யானைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முயற்சி செய்தபோது, யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில், யானை மீது தீ வைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது மசினகுடியைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் ரைமண்ட் டீன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ரிசார்ட் ஊழியரான ரிக்கி ரையான் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x