

திருச்சி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 1,127 பேர் உட்பட 1,492 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகளை மனிதர்களுக்கு இடுவதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.
திருச்சி உள்ளிட்ட 8 சுகாதார மாவட்டங்களுக்கான கரோனா தடுப்பூசிகள், திருச்சியில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு ஜன.13-ம் தேதி வரப்பெற்று, உடனடியாக அந்தந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தொடர்ந்து, கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பதிவு செய்த முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் திருச்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் 160 மையங்களில் ஜன.16-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை மருத்துவர்கள், செவிலியர்கள் என 1,158 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையில், இன்று மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, லால்குடி, ஸ்ரீரங்கம், துவாக்குடி, துறையூர் அரசு மருத்துவமனைகள், புத்தாநத்தம், இனாம்குளத்தூர், சிறுகனூர் ஆகிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் 334 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,492 ஆகியுள்ளது.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 1,492 பேரில் 365 பேர் அரசின் மருத்துவத் துறைகளிலும், 1,127 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அரசு மருத்துவத் துறையினரைக் காட்டிலும், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.