Published : 22 Jan 2021 06:54 PM
Last Updated : 22 Jan 2021 06:54 PM

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்ட கோயில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய யோசனை

சென்னை

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கக் கோயில் நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பதைவிட, இழப்பீட்டுத் தொகை கொடுத்து கையகப்படுத்தலாமே என்று உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், கோயில் நிலத்தை நீண்டகாலத்துக்குக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த நவம்பர் 28-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, முறையான சட்ட விதிகளைப் பின்பற்றாமல் குத்தகைக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சியைச் சுற்றியே அரசுக்குச் சொந்தமான 39 இடங்களில் நிலம் உள்ளபோது, கோயில் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி கோயில் நிலங்கள், கோயிலின் தேவை மற்றும் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், என்னதான் குத்தகை மூலம் கோயிலுக்கு வருமானம் கிடைத்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுவிட்டால் அது நிரந்தரமாகிவிடும் எனவும், அந்த நிலம் மீண்டும் கோயிலுக்குத் திரும்பக் கிடைக்கப் பெறாமல் போகும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பந்தப்பட்ட இடத்தின் மூலம் கோயிலுக்குத் தற்போது எந்த வருமானமும் இல்லை எனவும், அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதன் மூலம் கோயிலுக்கு மாதம் 1.3 லட்சம் வாடகையாகக் கிடைக்கப்பெறும் எனவும், இதன் மூலம் கோயிலுக்கு வருவாய் பெருகும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலைப் புனரமைக்க அரசு 2.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நீதிமன்றங்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இடம் பெற உள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிடும் மற்ற இடங்கள் உகந்ததாக இல்லாததன் காரணமாகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

அப்போது நீதிபதிகள் நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பதற்குப் பதிலாக அரசே உரிய இழப்பீட்டுத் தொகையை அறநிலையத்துறைக்குச் செலுத்திவிட்டு, அந்த இடத்தைக் கையகப்படுத்தலாமே என யோசனை தெரிவித்தனர்.

பொதுநல வழக்காகத் தெரிந்தாலும், மனுதாரர் நீதிமன்றத்தில் வைக்கும் வாதங்கள் திருப்திகரமாக இல்லை என்பதால் மேற்கொண்டு தகுந்த சான்றுகளோடு வாதங்களை முன்வைக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x