Last Updated : 22 Jan, 2021 05:57 PM

 

Published : 22 Jan 2021 05:57 PM
Last Updated : 22 Jan 2021 05:57 PM

புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து விசிக போராட்டம்: 210 பேர் கைது

புதுச்சேரி

புதுச்சேரியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெறாததைக் கண்டித்து புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 210 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பே (ஒயிட் டவுண் பகுதி) தடுப்புகள் அமைக்கப்பட்டு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது. துணை ராணுவப் படையினர், ஐ.ஆர்.பி. போலீஸார், உள்ளூர் போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 தடை உத்தவும் போடப்பட்டுள்ளது.

தலைமை தபால் நிலையம், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் போன்ற பகுதிகளுக்கும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு செல்பவர்களிடம் போலீஸார் பல்வேறு கேள்விகளைக் கேட்டு நடந்து செல்ல மட்டும் அனுமதித்தனர். இதனால் ஒயிட் டவுண் பகுதியில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனிடையே முதல்வர் நாராயணசாமி மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு கூட்டத்தைக் கூட்டி, தடுப்புகளை அகற்ற 24 மணி நேரக் கெடு விதித்தும், காவல்துறை அதிகாரிகளைப் பலமுறை எச்சரித்தும் தடுப்புக் கட்டைகள், முள்வேலிகள் முழுமையாக அகற்றப்படவில்லை.

நேற்று முதல் தலைமை தபால் நிலையம், மணக்குள விநாயகர் கோயில் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும், நடந்து செல்லும் விதமாகவும், இருசக்கர வாகனங்களில் சென்று வரும் வகையிலும் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், முழுமையாக அகற்றப்படவில்லை.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் பாவாணன் தலைமையில் 250க்கும் மேற்பட்டோர் இன்று (ஜன 22) பேட்டையன்சந்திரம் வழுதாவூர் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். ஏற்கெனவே போராட்டம் நடத்தியும் 144 தடை உத்தரவை வாபஸ் பெறாத நிலையில், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிடச் சென்றனர்.

தகவல் கிடைத்து அங்கு விரைந்து வந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், இனியன் தலைமையிலான போலீஸார் நுழைவுவாயிலை இழுத்து மூடினர். ஆனால், அதைத் தள்ளிவிட்டு ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலைத் தாண்டி நுழைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. ஆட்சியர் அலுவலகத்துக்குள் பணியிலிருந்த அதிகாரிகள் அங்கிருந்த அதிகாரிகள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினர். இதனால் அதிகாரிகளைச் சந்தித்து முறையிட முடியாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து சில மணி நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 46 பெண்கள் உட்பட 210 பேரை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x