Last Updated : 22 Jan, 2021 02:43 PM

 

Published : 22 Jan 2021 02:43 PM
Last Updated : 22 Jan 2021 02:43 PM

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லுர் வட்டாரத்தில் மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேதம்: வேளாண் அதிகாரிகள் குழு ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்தது. சில இடங்களில் கன மழை பெய்தது.

இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் மழையில் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், வேளாண்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கள ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பயிர்ச் சேதம் குறித்து தகவல் தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை கேட்டுக்கொண்டது.

மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் சுமார் 6500 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து மற்றும் பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் தொடர் மழையில் சேதமடைந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி வேளாண்மை இணை இயக்குநர் தலைமையில் மேலநீலிதநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அடங்கிய குழுவினர் மழைச் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வந்த மாநில குழு மேலநீலிதநல்லூர் வட்டரத்தில் ஆய்வு மேற்கொண்டது.

தலைமையிடத்து துணை இயக்குநர் விஜயலட்சுமி தலைமையில், வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, மேலநீலிதநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் நயினார் முகம்மது, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, வட்டாட்சியர் திருமலைச்செல்வி, வேளாண் அலுவலர் அறிவழகன், துணை வேளாண் அலுவலர் ரவிசந்திரன் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அனைத்து வருவாய் கிராமங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு அந்தந்த பகுதிகளில் பாதிக்கப்ப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை பதிவு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் அடங்கல், பட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் பகுதி கிராம நிர்வாக அலுவலரை அணுகி உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

வேளாண் துறை, வருவாய்த்துறை கள அலுவலர்கள் ஆய்வு செய்து தகுதியான நபர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து இழப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய பரிந்துரை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x